சாதனை தமிழர்கள்

டாக்டர் எம் எஸ் சுவாமிநாதன்
பல ஆண்டுகளுக்கு முன்பு அயல் நாடுகளில் இருந்து உணவு தானியங்களை இறக்குமதி செய்து கொண்டிருந்த இந்தியாவை, பசுமைப் புரட்சியின் மூலம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடையச் செய்த சாதனையில் முக்கியப் பங்கு வகித்த 'பசுமைப் புரட்சியின் தந்தை'
திருமதி.எம்.ரேவதி
சுனாமியால் நாகைப் பகுதியிலுள்ள விவசாயத்திற்கு பயனற்றுப்போன 1,200 ஏக்கர் நிலங்களை இயற்கை விவசாய முறையில் பழைய நிலைக்கு விளைநிலங்களாக மாற்றியவர். இவரது இயற்கை தொழில்நுட்பத்தைக் கேள்விப்பட்டு இவரை அழைத்த பில் கிளிண்டன்,கேட்டுக் கொண்டதன் பேரில் இந்தோனேஷியாவில் 7 லட்சம் ஏக்கர் நிலங்களையும் சீர் செய்து கொடுத்தவர்


திரு.த.ஜெயகாந்தன்
உலகின் சிறந்த இலக்கியத்திற்கு நிகராக நவீன தமிழ் இலக்கியத்தைத் தனது படைப்புகளின் மூலம் சிகரங்களுக்கு எடுத்துச் சென்ற சிறந்த இலக்கியவாதி. இளம் தலைமுறையினர் படைப்பெழுச்சி கொள்ளும் வகையில் இலக்கியங்களைப் படைத்த முன்னோடி
திரு.சு.வெங்கடேசன்
அடித்தள தமிழ் மக்களின் அறுநூறு ஆண்டு கால வரலாற்றை ஓர் வரலாற்று வரைவியல் புதினமாக உருவாக்கி, தனது முதல் படைப்பிற்கே சாகித்ய அகாதமி விருது பெற்ற படைப்பாளி. ஜெயகாந்தனுக்கு அடுத்தபடி மிக இளம் வயதில் இந்த அங்கீகாரத்தைப் பெற்றவர்


திரு.வேணு ஸ்ரீநிவாசன்
இரு சக்கர வாகனங்கள் தயாரிக்கும் உலகின் முன்னணி பத்து நிறுவனங்களில் ஒன்றாகத் தனது நிறுவனத்தை வளர்த்தெடுத்ததோடு மட்டுமன்றி 720 கிராமங்களைத் தத்தெடுத்து அங்கு வசிக்கும் ஒவ்வொரு குடும்பமும் மாதம் 10 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்ட வழி செய்தவர்
திரு.ஏ. முருகானந்தம்
ஓர் இரும்புப் பட்டறையில் தொழிலாளியாக வாழ்க்கையைத் துவக்கி, தனது இடைவிடாத ஆராய்ச்சியின் மூலம் சானிடரி நாப்கின் தயாரிக்கும் இயந்திரத்தை தயாரித்துக் குறைந்த விலையில் விற்பனைக்குக் கொண்டு வந்ததன் மூலம் ஆயிரக்கணக்கான கிராமப்புற ஏழை இளம் பெண்கள் சுகாதாரத்துடன் வாழ வகை செய்தவர்


திரு.ஏ. ஆர். ரஹ்மான்
நவீனத்துவம், தொழில்நுட்பம் கற்பனை, தரம் இவை அனைத்தும் ஒருங்கிணைந்த இசையின் மூலம் உலகத்தின் கவனத்தை ஈர்த்த தமிழர். திரை இசைக்குப் புதிய பரிணாமம் கொடுத்த இளைஞர்
சகோதரி சந்திரா
ஆண்களுக்கு மட்டும் என்றிருந்த, தப்பாட்டம் என்ற தமிழ்ப் பாரம்பரிய நடனக் கலையை, பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்ட கிராமப்புறப் பெண் குழந்தைகளுக்குக் கற்பித்து 'சக்தி கலைக் குழு'வை உருவாக்கியவர். பெண் கல்வி, பெண் உரிமை தொடர்பான கருத்துக்களை இந்தியாவில் பல மாநிலங்களிலும் உலகின் பல பகுதிகளிலும் பரப்பி வருகிறது இக்குழு


திரு. விஷ்வநாதன் ஆனந்த்
அறிவுக் கூர்மைக்கும், ஆற்றலுக்கும் சவால் விடும் விளையாட்டான சதுரங்கத்தில் தொடர்ந்து பல ஆண்டுகளாக உலக அளவில் சாம்பியனாகத் திகழும் தமிழர். ஆறு முறை வெளியிடப்பட்டுள்ள உலகத் தர வரிசைப் பட்டியலில் ஐந்து முறை இவர் முதலிடம் வகித்தவர்
செல்வி. காயத்ரி கோவிந்தராஜ்
கடினமான வாழ்க்கைச் சூழலை எதிர்கொண்டபோதும் தனது திறனாலும் முயற்சியாலும் 2008ம் ஆண்டு இளைஞர்களுக்கானகாமன்வெல்த் போட்டிகளில் தொடர் ஓட்டத்திலும், 2009ம் ஆண்டு தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 100 மீ.தடை தாண்டும் ஓட்டத்திலும் தங்கப்பதக்கம் வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்தவர்

No comments:

Post a Comment