அணைந்தது ஒரு உயிர்... ஒளி கிடைத்ததோ ஏழு பேருக்கு!


மூளைச் சாவு ஏற்பட்ட கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் ஏழு பேருக்குப் பொருத்தப்பட்டு அவர்கள் மறுவாழ்வு பெற்றுள்ளனர். அந்த ஏழு பேரின் குடும்பமும், இந்தக் கோவை மாணவிக்கு கண்ணீர் மல்க நன்றி கூறி நிற்கின்றனர்.
கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் கே.மணியன். மதிமுக நகர அமைப்பாளராக இருக்கிறார். சொந்தமாக ஒர்க் ஷாப் வைத்திருக்கிறார். இவருக்கு சரண்யா என்ற 21 வயது மகள் இருந்தார். கோவையில் தனியார் பொறியியல் கல்லூரியில், பிஇ எலக்ட்ரிகல் என்ஜீனியரிங் படித்து முடித்துள்ளார். படிப்பை முதல் வகுப்பில் பாஸ் செய்திருந்தார்.
இந்த நிலையில் கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக தனது தோழிகள், உறவினர்களுடன் கார் மூலம் சேலம் சென்றுள்ளார். கருத்தரங்கை முடித்துக் கொண்டு திரும்புகையில், சித்தோடு அருகே கார் மீ்து லாரி மோதியது. இதில் சரண்யாவுடன் வந்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சரண்யாவும், அவரது தோழி பானுப்பிரியாவும் படுகாயமடைந்து உயிருக்குப் போராடினார்கள். அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் சரண்யாவை கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் மூளைச்சாவை சந்தித்தார்.
இதையடுத்து தனது மகளின் உடல் உறுப்புகளை தானம் செய்ய தந்தை மணியன் முன்வந்தார். இதையடுத்து அதற்கான ஏற்பாடுகளில் டாக்டர்கள் இறங்கினர். டீன் டாக்டர் குமரன் நேரடி மேற்பார்வையில் பணிகள் முடுக்கி விடப்பட்டன.
சென்னை அப்பல்லோ மருத்துவ குழுவினர் நேற்று காலை விமானம் மூலம் சென்று, சரண்யாவின் ஈரல் மற்றும் இருதய வால்வு உறுப்புகளை தானமாக பெற்று, உடனடியாக விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வந்தனர். ஏற்கனவே தயாராக இருந்த ஒரு நோயாளிக்கு ஈரல் பகுதியை பொருத்தினார்கள். இருதய கோளாறால் பாதிக்கப்பட்ட மற்ற நோயாளிகளுக்கு இருதய வால்வுகளை அறுவை சிகிச்சை மூலம் பொருத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதேபோல் சரண்யாவின் இரு கண்களும், கோவையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனையை சேர்ந்த டாக்டர்கள் பெற்றுச்சென்றனர். மாணவியின் கண்கள் 2 பேருக்கு பொருத்தப்பட்டது.
இதேபோல் சரண்யாவின் 2 சிறுநீரகங்களும் கே.எம்.சி.எச். மருத்துவமனையில் உள்ள 2 நோயாளிகளுக்கு பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சரண்யாவின் உடல் உறுப்புகளின் மூலம் சென்னை மற்றும் கோவையில் உள்ள 7 பேர் புது வாழ்வு பெற்றுள்ளனர். தனது மகளின் உடல் உறுப்புகளைத் தானம் செய்த தந்தை மணியன் கூறுகையில்,
என்னுடைய மகள் சிறுவயது முதலே படிப்பில் சுட்டி. மற்றவர்களின் நலனிலும் அக்கறை செலுத்தி வந்தாள். அதனால்தான் கல்லூரியில் படிக்கும்போதே சேவைப்பணிகளில் ஈடுபட்டு ரோட்ராக்ட் விருதுகளை அதிகமுறை பெற்று இருந்தாள். ரத்ததானமும் செய்வாள்.
விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த என்னுடைய மகளுக்கு மூளைச்சாவு ஏற்பட்டு விட்டதாக டாக்டர்கள் கூறியது, பேரிடியாக இருந்தது. பாசமாக வளர்த்த மகள் மரணம் அடைந்தது பெரும் வேதனையை அளித்தாலும், அவளுடைய உடல் உறுப்புகளை பலருக்கு தானமாக அளிக்க முன்வந்தேன்.
ஈரல், சிறுநீரகம், கண்கள், இருதய வால்வு ஆகிய உறுப்புகள் மூலம் 7 பேருக்கு மறு வாழ்வு கிடைத்து இருப்பது, மரணத்தை வென்று என் மகள் இன்னும் வாழ்வதாகவே உணர்கிறேன். உடல் உறுப்புகளை தானம் செய்ய எடுத்த முடிவின் மூலம் சேவை மனப்பான்மை மிக்க எனது மகளின் ஆன்மா நிச்சயம் சாந்தி அடையும் என்று நம்புகிறேன்.
இந்த வேதனையான நிலையிலும், மற்றவர்களுக்கு நான் கூறிக்கொள்வது, உடலை புதைத்து உறுப்புகளை சிதைத்து விடாதீர்கள். இதன் மூலம் பலருக்கு வாழ்வு கிடைக்கும் என்றால் உடல் உறுப்புகளை தானம் செய்து அதன் மூலம் வாழ்க்கை அளியுங்கள் என்று கூறிக்கொள்கிறேன் என்றார் அவர்.
இதில் வேதனை என்னவென்றால் சரண்யாவின் நெருங்கிய தோழியாக இருந்தவர் சாலினா. பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர். இருவரும் எல்.கேஜி முதல் என்ஜீனியரிங் வரை ஒன்றாகப் படித்து வந்தனர். படிப்பிலும் இருவரும் சுட்டியாக இருந்துள்ளனர். இருவரும் படிப்பை தலா 93 சதவீத மதிப்பெண்களுடன் முடித்துள்ளனர். இருவருக்கும் ஒன்றாகவே இன்போசிஸ் நிறுவனத்தில் வேலையும் கிடைத்துள்ளது. பணியில் சேர காத்திருந்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக மரணத்திலும் கூட இருவரும் பரிதாபமாக ஒன்று சேர்ந்துள்ளனர்.

No comments:

Post a Comment